பதன்கோட் விமான படை தளம் மீதான தாக்குதலில் உயிர் தப்பிய "இலங்கை" விமானப் படை வீரர்கள்!!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தின் மீதான பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலின் போது அங்கு தங்கியிருந்த இலங்கை விமானப் படை வீரர்கள் உட்பட 23 வெளிநாட்டு வீரர்கள் உயிர்தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதன்கோட் விமானப் படை தளம் மீது எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 நாட்களாக தாக்குதல் நடத்தினர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய பாதுகாப்புப் படையின் 7 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத்தின் மேற்கு பிராந்திய தளபதி லெப். ஜெனரல் கே.ஜே.சிங், பதன்கோட் விமான தளம் 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆபரேஷன் டாங்கு என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதிகளை அழிக்க மிக் 21 போர் விமானங்கள், எம்.ஐ 25, எம்ஐ 35 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்றார்.
மேலும் இந்த தாக்குதல் நடைபெற்ற போது விமானப் படையினரின் 3,000 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரம் விமான படைதளத்தில் இருந்துள்ளனர். அத்துடன் இலங்கை, ஆப்கான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயிற்சிக்காக வந்த 23 விமான படையினரும் தங்கியிருந்தனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றார் கேஜே சிங்.