அமிர்தசரஸில் ரூ.115 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் பறிமுதல்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் ரூ.115 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் செக்டரில் இருக்கும் தெஹ்காலா எல்லையில் உள்ள முகாம் அருகே போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றனர்.
அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்த எல்லைக்கு யாரோ சிலர் பாக்கெட்டுகளை வீசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த எல்லைப் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றபோது எல்லையின் அந்த பக்கத்தில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு எல்லைப் பாதுகாப்பு படையினரும் சுட்டனர். துப்பாக்கிச்சூடு ஓய்ந்த பிறகு பாக்கெட்டுகள் விழுந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 23 பாக்கெட்டுகளில் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு கிலோ போதைப் பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.115 கோடி ஆகும். மேலும் அந்த பகுதியில் பாகிஸ்தான் சிம் கார்டுடன் கூடிய செல்போன் ஒன்றும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.