ஓமைகாட், 23% பேரின் ரத்தத்தில் கந்தகம்: நாடு முமுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் திடுக் தகவல்
டெல்லி: மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை சோதித்ததில் அவற்றில் 23 சதவீத மாதிரிகளில் கந்தகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸுக்கு பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை நெஸ்லே நிறுவனம் சந்தையில் இருந்து வாபஸ் பெற்றது.
இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றில் 23 சதவீத மாதிரிகளில் கந்தகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் கந்தக நச்சால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இந்த விவகாரம் வளர்ந்துவரும் நாடுகளுக்கு பெரிய சுமையாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரத்த மாதிரி ஆய்வு பற்றி மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் டாக்டர் சந்தீப் வார்கடே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும் இருந்து 733 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஆய்வில் 23.47 சதவீத மாதிரிகள் அதாவது 172 மாதிரிகளில் கந்தகம் இருப்பது தெரிய வந்தது. கந்தக நச்சால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அவர்களின் உடல் பாகங்கள் பாதிக்கப்படும். ரத்த மாதிரிகளை மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் ஆய்வு செய்தது என்றார்.
கந்தக நச்சால் வளரும் குழந்தைகளுக்கு ஐக்யூ பாதிக்கப்படும், அவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாது, படிப்பதில் பிரச்சனை ஏற்படும், ரத்த சோகை ஏற்படும். கந்தக நச்சின் அளவு அதிகமானால் மூளை மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்படுவதுடன் கோமா ஏன் மரணம் கூட ஏற்படும்.