மோடி திரைப்படத்தில் நடித்த விவேக் ஓபராய்க்கு கொலை மிரட்டல்... போலீஸ் பாதுகாப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த விவேக் ஓபராய்க்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்ததிர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி "பிஎம் நரேந்திர மோடி" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ஓமங் குமார் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நரேந்திர மோடி பாத்திரத்தில் பிரபல இந்திய நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
கடந்த மாதம் 11ந் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலையொட்டி, படத்தை வெளியிட்டால் அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இதனையடுத்து, பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை திரையிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. கடைசி கட்ட தேர்தல் நடந்த மே 19ந் தேதி வரை திரையிடக்கூடாது என்று உத்தரவிட்டது.
வாக்குப்பதிவுகள் முடிந்து வாக்குப் பதிவு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இந்த நிலையில், பிஎம் நரேந்திர மோடி படத்தை நாளை திரைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நக்சலைட்டுகளிடமிருந்து விவேக் ஓபராய்க்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருக்கும், அவரது வீட்டிற்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். அவரது பாதுகாப்புக்காக 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ராயை வைத்து போடப்பட்ட கேலி சித்திர படத்தை சமூக வலைத்தளத்தில் பகிரந்து கொண்டதற்காக கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் விவேக் ஓபராய் எதிர்கொண்டார். அதற்கு மன்னிப்பும் கோரினார்.
இந்த நிலையில், பிஎம் நரேந்திர மோடி படத்தில் மோடியாக நடித்த அவருக்கு நக்சலைட்டுகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த கொலை மிரட்டல் எங்கிருந்து விடுக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விவேக் ஓபராய் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இணைந்து வெளியிட்டனர். அந்த போஸ்டரில் "பிரதமர் மோடி மங்கல சங்கு ஊதுவது போல போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும், பிஎம் மோடி மீண்டும் வருகிறார். இப்போது யாராலும் அவரை தடுக்க முடியாது என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.