ஜூலை 21ல் துவங்கும் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர்: எல்.மோடி பிரச்சனையை கிளப்ப உள்ள எதிர்கட்சிகள்
டெல்லி: நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் 21ம் தேதி துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் மூன்று வார காலம் நடக்கும்.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வழக்கமாக நடக்கும் 4 வாரங்களுக்கு பதிலாக 3 வாரங்கள் நடக்க உள்ளது. கூட்டத்தொடரில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி பிரச்சனையை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
முன்னதாக ஜூலை 20ம் தேதி கூட்டத்தொடரை துவங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ரம்ஜான் பண்டிகை ஜூலை 18 அல்லது 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் கூட்டத்தொடரை துவங்கும் தேதி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
லலித் மோடி விவகாரம் தவிர நிலம் கையப்படுத்தும் பிரச்சனையும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லலித் மோடிக்கு உதவிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகாவிட்டால் இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்காது என்று காங்கிரஸ் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
லலித் மோடி விவகாரத்தில் எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இந்த கூட்டத்தொடரில் எந்த வேலையும் நடக்காது என்று ராஜ்யசபாவின் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
லோக்பால் மற்றும் லோக் அயுக்தா திருத்த மசோதா, நீர்வழி போக்குவரத்து மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா, பினாமி நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது லோக்சபா 35 நாட்களும், ராஜ்யசபா 32 நாட்களும் நடைபெற்றது. அதில் அமளியால் லோக்சபாவில் 6 மணிநேரம் 54 நிமிடங்களும், ராஜ்யசபாவில் 18 மணிநேரம் 28 நிமிடங்களும் வேலை பாதிக்கப்பட்டது.