கழுத்தை நெறித்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்
அய்ஸ்வால்: மிசோரமில் தனது கழுத்தை நெறித்த கணவனை இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
மிசோரம் மாநிலம் மாமித் மாவட்டத்தில் உள்ள கவுர்தா நகர் அருகே இருக்கும் முவால்துவாம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் மோகன். அவரது மனைவி கோரிதி என்ற பியாகி(25). மோகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து கிளம்பி பண்ணைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பியாகி ராம் மோகனை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பியாகியிடம் விசாரித்தபோது ராம் மோகன் தனது கழுத்தை நெறித்ததாகவும் பதிலுக்கு அவரை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பியாகியை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.