பாஜக செய்த சாதனைகளை தொட பிற கட்சிகளுக்கு 25 ஆண்டுகளாகும்.... பிரதமர் மோடி பேச்சு
சூரத்: பாஜக அரசு செய்த சாதனைகளை மற்ற கட்சிகள் செய்ய 25 ஆண்டுகளாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், தொங்கு நாடாளுமன்றம் அமைந்ததால் தான், நாடு பின்தங்கி போய்விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
தமது அரசு செய்த சாதனைகளை, மற்ற கட்சிகள் செய்ய 25 ஆண்டுகளாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்து, ஏராளமான இளைஞர்கள் வீடுகளை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக , கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், அதற்கு பின் ஏதாவது நடந்ததா எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
மும்பை தாக்குதலின் போது காங்கிரஸ் அரசு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் உரி தாக்குதலின் போது தங்களால் தூங்க முடியவில்லை என்றும் கூறிய மோடி, பதிலடி தாக்குதலாக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகவும் தெரிவித்தார்.