பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் நீடிக்கும் பதட்டம்!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் டிசம்பர் 6-ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்படுகிறது.
டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உளவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆண்டுதோறும் பலப்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் பாபர் மசூதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து பெரும்பாலான இடங்களில் பதற்றம் ஏற்படும் நிலை உள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உளவுத் துறை மாநில காவல் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கூட்டம் நிறைந்த இடங்கள்
அதேவேளை இரட்டை நகரங்களான ஃபரீதாபாத் மற்றும் அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய கட்டடங்கள், கூட்டம் நிறைந்த கடைவீதிகள், பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர். மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
ஏதேனும் வதந்திகள் பரப்பப்படலாம் என்பதால் அதுகுறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் இரட்டை நகரங்களில் உள்ள மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருப்பு தினம்...
பாபர் மசூதி தினத்தையொட்டி விஸ்வ இந்து பரிஹத் சார்பில் வெற்றி தினமாக அனுசரித்து தலைமையகமான அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் இன்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பேரணி ஆகியவற்றை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.