மும்பை தாக்குதல்: கற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன? விவரிக்கிறார் முன்னாள் 'ரா' அதிகாரி பாலச்சந்திரன்
டெல்லி: இந்திய மண்ணில் மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் அத்தகைய ஒரு தாக்குதல் நிகழ்த்தப்படாத வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களை நாம் எப்படி எதிர்கொள்ள தயாராகி இருக்கிறோம்? என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? நவம்பர் 26-ந் தேதி தாக்குதல் சம்பவத்தில் உதவிய இந்தியர்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இதுபற்றிய தொடர் பல பகுதிகளாக ஒன் இந்தியாவில் இடம்பெறுகிறது.
இதன் முதல் பகுதியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும் அமைப்பான 'ரா'வின் முன்னாள் அதிகாரியும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது போலீசாரின் செயல்பாடு குறித்து ஆராய்ந்த குழுவின் தலைவருமான வி. பாலச்சந்திரனிடம் நாம் பேசினோம். இந்த முதல் பகுதியில் வி. பாலச்சந்திரன் ஒன் இந்தியா இணையதளத்துக்கு அளித்த பேட்டி இடம்பெறுகிறது.
இதில் மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான ஹேட்லியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எந்த ஒரு அரசும் எதுவும் செய்யவில்லை என்பதை முக்கியமாக வி. பாலச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் நிலைமை எப்பைட் மாறியுள்ளது? இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்கிறோமா?
பொதுமக்களும் போலீசாரும் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள உளவியல் ரீதியாக தயார் நிலையிலேயே இருக்கின்றனர். 1993 ஆம் ஆண்டு முதல் வெடிகுண்டு தாக்குதல்களைத்தான் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இத்தகைய கமாண்டோ தாக்குதல்களை நாம் மும்பை தாக்குதலின் போதுதான் முதன் முறையாக அதிர்ச்சியுடன் பார்க்க நேரிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாருக்குத்தான் இத்தகைய ஒரு அனுபவம் இருந்தது. ஆனால் 2008 நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் போது நிலைமையை எதிர்கொண்டு காயம்பட்டோரை பாதுகாப்பதிலும் பயங்கரவாதிகளை எதிர்கொள்வதிலும் பொதுமக்களும் போலீசாரும் முனைப்புடன் செயல்பட்டனர்.
இப்போது அவர்கள் எப்படி இந்தியாவுக்குள் ஊடுருவுவார்கள்? என்ன மாதிரியான தாக்குதல்களை நடத்துவார்கள்? பொதுமக்கள் எப்படி அதனை எதிர்கொள்வது என்பது தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிறோம்.
பயங்கரவாதிகள் மீண்டும் அத்தகைய பாணியிலான ஒரு தாக்குதலை மேற்கொள்ளமாட்டார்கள். மும்பையில் மட்டும் 2011ஆம் ஆண்டு மூன்று இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 26 பேர் பலியாகினர். மும்பையில் அனைத்து மூலை முடுக்கிலும் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமில்லை. அதை அறிந்துகொண்டே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பையின் ஒவ்வொரு வீதியும் பேருந்தும் ரயிலுமே தீவிரவாதிகளின் இலக்கு. இப்படி பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் போது நம்மால் அனைவரையும் பாதுகாப்பது என்பது இயலாத ஒன்றாகிவிடுகிறது.
இந்த விசாரணையில் உறுதியான முடிவை எட்டிவிட்டோமா? இல்லை குழப்பமான நிலைமைதான் நீடிக்கிறதா?
விசாரணைகள் நடத்தப்பட்டு உறுதியான முடிவை எட்டிவிட்டோம். பாராட்டத்தக்க அளவிலான விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் தொடர்பாக போலீசார் செயல்பாடு குறித்து உங்களது அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?
இதுவரை இதைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. மகாராஷ்டிரா மாநில அரசு எங்களுக்கு இதைப் பற்றி தெரிவிக்கவில்லை. உண்மையில் அரசு என்ன செய்தது? என்பதைப் பற்றி எங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை. இருப்பினும் ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், போலீசார் கோருகிற ஆயுதங்கள், உபகரணங்களை வழங்குவதற்கு "குழுக்கள்" அமைத்து தாமதம் செய்யக் கூடாது என்ற மிக முக்கியமான பரிந்துரை பின்பற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் காவல்துறையை நவீனமயமாக்க ரூ192 கோடி ஒதுக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது நல்ல நடவடிக்கை.
மும்பை தாக்குதலில் இந்தியர்கள் எப்படி உதவினார்கள்? என்பது குறித்த விசாரணையை அரசு தொடர்ந்து தவிர்த்து வருகிறதே ஏன்?
நேபாளத்தில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு வரைபடங்களை கொடுத்ததாக பகீம் அன்சாரி, அகமது சேக் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது. மும்பை தாக்குதலில் ஹேட்லியின் தொடர்பு குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. எனக்குத் தெரிந்த வரையில் எப்.பி.ஐ. அதிகாரிகள் கூட விசாரணையின் போது ஹேட்லியைப் பற்றி எதுவும் கூறவில்லை. தற்போது தேசிய புலனாய்வு அமைப்பை இதை ஆராய்ந்து வருகிறது.
ஹேட்லி விவகாரத்தில் புதிய மத்திய அரசு ஏதாவது புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதா?
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது ஹேட்லி விசாரணையை குறித்து பல தவறான தகவல்களை தெரிவித்திருந்தது. ஹேட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது. டென்மார்க்குக்கு அவரை நாடு கடத்த கூடாது.. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நிபந்தனைகளை அமெரிக்கா அதிபர் ஒபாமாவால் மாற்றி அமைக்க முடியும். தற்போது அவர் 35 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்த பின்னர்தான் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இந்த விவகாரத்தை அமெரிக்காவின் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை கைவிடுவது குறித்து முறையிடவும் முடியும்.