தொழில்நுட்ப கோளாறு: வீடியோ கான்பரன்சிங்கில் ஹெட்லி வாக்குமூலம் அளிப்பது ஒத்திவைப்பு
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹெட்லி வீடியோகான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளிப்பது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
அமெரிக்க சிறையில் இருக்கும் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை தாக்குதல் வழக்கு குறித்து மும்பை நீதிமன்றம் முன்பு வாக்குமூலம் அளித்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வந்தார்.
இந்நிலையில் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரால் வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் வாக்குமூலம் அளிப்பது நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக கூறி வந்த பொய்கள் அனைத்தையும் ஹெட்லி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மேலும் மும்பையில் தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா அமைப்பு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.