26/11க்கு முன் பாக்.கில் இருந்து 6 முறை இந்தியாவில் உளவு பார்த்தேன்.. வீடியோ கான்பரன்சில் ஹெட்லி
மும்பை: மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக உளவு பார்ப்பதற்காக இந்தியாவிற்கு ஏழு முறை வந்து சென்றதாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்காவில் இருந்தபடியே மும்பை நீதிமன்றத்தில் தீவிரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார். இதில், 6 முறை அவர் நேரடியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளார்.
மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 309 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய டேவிட் ஹெட்லி, பின்னர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான். இந்நிலையில், ஒரு வழக்குத் தொடர்பாக டேவிட் ஹெட்லியை அமெரிக்கப் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீடியோ கான்பரன்சிங்...
இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தொடர்பாக மற்றொரு சதிகாரன் அபு ஜுன்டாலுடன் சேர்ந்து, டேவிட் ஹெட்லியும் விசாரிக்கப்பட வேண்டும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம், மும்பை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதனை ஏற்று, டிசம்பர் 10-ந் தேதி டேவிட் ஹெட்லியை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்துமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை கோர்ட்டில்...
அதன்படி, அமெரிக்காவில் இருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தடா கோர்ட்டில் டேவிட் ஹெட்லி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் குற்றச்சாட்டு விவரங்களை நீதிபதி விளக்கிக் கூறினார்.
ஒப்புதல்...
அதனைத் தொடர்ந்து டேவிட் ஹெட்லி, "எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறேன். எனக்கு மன்னிப்பு அளித்தால், இந்த கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்கும், ‘அப்ரூவர்' ஆவதற்கும் தயாராக இருக்கிறேன்'' என்றார். இதையடுத்து, டேவிட் ஹெட்லியை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவரை அப்ரூவராக ஏற்றுக்கொண்டது. அவர் பிப்ரவரி 8-ந் தேதி, அரசுத்தரப்பு சாட்சியாக கோர்ட்டில் சாட்சியம் அளிக்கவும் உத்தரவிட்டது.
உளவு பார்க்க...
அதன்படி, டேவிட் ஹெட்லி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர், ‘மும்பைத் தாக்குதலுக்கு முன்னதாக உளவு பார்ப்பதற்காக இந்தியாவிற்கு ஏழு முறை வந்ததாக' கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஆறு முறை அவர் நேரடியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஒரே ஒருமுறை மட்டும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்து சென்றுள்ளார்.
யார் அந்த பஷீர்...
முதன்முறை இந்தியா வந்தபோது அவருக்கு பஷீர் என்ற நபர் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த பஷீர் குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை என மும்பை தாக்குதல் குறித்து புத்தகம் எழுதிய தவஹூர் ராணா தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவு...
முதல்முறை இந்தியா வந்தபோது மும்பையின் முக்கிய இடங்களை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார் ஹெட்லி. அதன்பிறகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் மற்றும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் ஆகியவற்றை ஹெட்லி உளவு பார்த்துள்ளார்.
தாக்குதலுக்குப் பின்...
மும்பைத் தாக்குதலின் பின், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி மீண்டும் இந்தியா வந்துள்ளார் ஹெட்லி. அப்போது அவர் டெல்லியில் இருந்து லாகூருக்கு விமானத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னணியில் பாக்...
மேலும், இந்த மும்பை தாக்குதலின்போது, பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பை (ஐஎஸ்ஐ) சேர்ந்த மேஜர் இக்பால் மற்றும் சமீர் அலி ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் ஹெட்லி செயல்பட்டதாகவும், பிரிகேடியர் ரிவாஸின் கீழ் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுஜா பாஷா...
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லக்வியை ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் சுஜா பாஷா சந்தித்ததாகவும் விசாரணையின்போது ஹெட்லி கூறியதாகத் தெரிகிறது.
வாக்குமூலம் மூலம்...
இதன்மூலம், பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்தான் மும்பை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என ஹெட்லியின் வாக்குமூலம் மூலம் உறுதியாகியுள்ளதாக தேசிய புலனாய்வு வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதன்முறையாக...
இந்திய சட்டத்துறை வரலாற்றில் வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் கைதி ஒருவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.