26/11 மும்பை தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு உதவிய டி.வி. சேனல்களின் நேரடி ஒளிபரப்பு!
மும்பை: ஆறு வருடங்களுக்கு முன்பு மும்பை தாஜ் ஹோட்டலில் நவம்பர் 26ம்தேதி நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின்போது தொலைக்காட்சி மீடியாக்களின் உடனுக்குடனான பிரேக்கிங் செய்திகள் அதிக உயிர் பலிக்கு காரணமாக இருந்ததை மறக்க முடியாது. தொலைக்காட்சிகள் செய்த தொல்லைகள் ஒன்றா, இரண்டா.
தப்பியோட உதவி
தேசிய பாதுகாப்பு படை தலைவராக இருந்த ஜே.கே.தத் ஒருமுறை கூறுகையில், தொலைக்காட்சிகளால்தான் தங்களது பணி கஷ்டகரமானதாக மாறியதாகவும், தாஜ் ஹோட்டலின் ரகசிய பாதையை கூட தொலைக்காட்சிகள் கண்டுபிடித்து சொல்லியதால்தான் தீவிரவாதிகள் அதன் வழியாக தப்பியோடியதாகவும் தெரிவித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு படை வருகை லைவ்
தேசிய பாதுகாப்பு படையின் வருகை, காலதாமதம் போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் இந்திய தொலைக்காட்சிகள் பிரேக்கிங் செய்திகளாகவும், மைக்கை பிடித்து கத்துவதாகவும் தந்துகொண்டிருந்த நேரத்தில் கராச்சியில் இருந்த தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அறையில் இந்தியாவின் 67 டிவி சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றை பார்த்து தொலைபேசி வாயிலாக தாஜ் ஹோட்டலுக்குள் இருந்த தீவிரவாதிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்து தப்பியோடவும், பதில் தாக்குதல் நடத்தவும் வழி காண்பித்தனர்.
தேசபாதுகாப்பு இரண்டாம்பட்சம்
தேச பாதுகாப்பைவிட தகவலை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில்தான் பெரும் போட்டி நிலவியது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் தொலைக்காட்சி மீடியாக்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. தாக்குதல் ஆரம்பித்த நேரத்தில் இருந்து முடியும் நேரம்வரை தொடர்ந்து அதை டிவிகளில் காண்பித்து தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவியுள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் குற்றம்சாட்டியது.
கருத்து சுதந்திர எல்லை
இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவில் கருத்து சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே அரசியலமைப்பின், 21வது பிரிவில் வாழ்வதற்கான உரிமை என்ற ஒன்றும் மக்களுக்கு தரப்பட்டுள்ளது. மும்பையில் மீடியாக்கள் செய்தது, கருத்து சுதந்திரத்தை கொண்டு அடுத்தவர் வாழும் உரிமையை கெடுத்த செயலாகும். கருத்து சுதந்திரத்தை அடுத்தவர் வாழ்வை கெடுக்க மீடியாக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
குண்டு பாய்ந்தாலும் பிரேக்கிங்தான்
சக மீடியாக்காரர்களுக்கே மரியாதை கொடுக்காமல் பிறர் செய்தி வெளியிட்ட ஒரு சம்பவமும் அப்போது அரங்கேறியது. தாஜ் ஹோட்டலுக்குள் நடந்த துப்பாக்கி சண்டையின்போது ஒரு குண்டு ஜன்னலை உடைத்து வெளியே வந்து ஒரு பத்திரிகையாளர் முதுகில் பாய்ந்தது. லேசான காயத்தோடு அவர் தப்பினாலும், ரத்தம் ஒழுகியதால் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டார். ஆனால் 4 டிவி நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சட்டையை தூக்கியதுடன், தங்களது கேமராமேன்களை காயத்தில் ஜூம் செய்யுமாறு கூறினர். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை விட்டுவிட்டு மைக்குடன் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
போட்டுக்கொடுத்த மீடியாக்கள்
இதேபோல தேசிய பாதுகாப்பு படையினரின் உதவியால் ஹோட்டலுக்குள் இருந்த ஒரு பிணையக் கைதி அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தார். அவரை சூழ்ந்து கொண்ட டிவி நிருபர்கள் உள்ளே நடந்த அனுபவத்தை சுவாரசியமாக கேட்டனர். அப்போது மேலும் இருவர் ஹோட்டலின் டைனிங் அறையில் ஒழிந்திருப்பதாக தெரிவித்தார். அவ்வளவுதான் சில நிமிடங்களிலேயே தீவிரவாதிகளுக்கு தகவல் கிடைத்து அவர்கள் அந்த இரு அப்பாவிகளையும் சுட்டுக் கொன்னர்.
டிஆர்பிதான் முக்கியம்
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாதி இதை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்,. இந்திய டிவி சேனல்கள் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தன என்று. சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் கடந்தும் இன்னும் டிவி மீடியாக்கள் மாறவில்லை. தேசிய பாதுகாப்பை விட டிஆர்பி ரேட்டிங் முக்கியம் என்ற நிலையை மாற்ற அரசு ஒழுங்குமுறையை அமல்படுத்த முடியாது. அதை அந்தந்த மீடியாக்களின் மனசாட்சிதான் அமல்படுத்த வேண்டும்.