மறக்க முடியுமா...? அந்த கருப்பு நாளை..! #MumbaiTerrorAttack
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் கொடூர தாக்குதலை நடத்தினர்.
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஹோட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
166 பேர் பலி
சுமார் 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
யாரும் மறந்துவிட முடியாது
மும்பை நகரை ரத்தகளமாக்கி இந்தியாவையே அதிரவைத்த அந்தநாளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இதில் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் நெஞ்சில் இன்றளவும் ஆறா தழும்பாய் உள்ளது இந்த தாக்குதலின் தாக்கம்.
9வது ஆண்டு நினைவு தினம்
அந்த கொடூர தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதில் தங்களின் உறவுகளை பறிகொடுத்தவர்கள் அவர்களுக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் இரங்கல்
தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பை தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு தனது இரங்கலை செய்துள்ளார்
உறுதியேற்போம்..
இந்நாளில் அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம் என்றும் நம்முடைய மக்கள், நாடு, உலகம் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம் என்றும் குடியரசுத் தலைவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.