ஆஹா.. 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை.. அதுவும் சூப்பர் உரிமையுடன்.. ஆந்திர அரசு அதிரடி முடிவு
குண்டூர்: தெலுங்கு வருடப் பிறப்பு அன்று (மார்ச் 25ம் தேதி) ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஆந்திர குண்டூர் மாவட்டம் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த ஊரான வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் ஆந்திர மாநில செய்தித்துறை அமைச்சர் பேர்னி நானி செய்தியாளர்களிடம் பேசுகையில், உகாதி தினத்தன்று (மார்ச் 25ம் தேதி) ஆந்திரா முழுவதும் உள்ள 26 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. வீட்டு மனைகளில் வீடு கட்டிக் கொள்ளவும் ஐந்து ஆண்டுகள் வரை வங்கியில் அடமானம் வைத்து கொள்ளவும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்து கொள்வதற்கான உரிமையுடன் கூடிய பட்டா வழங்கப்பட உள்ளது..
இதற்காக தாசில்தார்களுக்கும் இணை பதிவாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.. வீட்டு மனைக்காக 43,141 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 26,976 ஏக்கர் அரசு நிலமும், 16,164 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு விலைக்கு வாங்கி இருக்கிறது.. போர்கால அடிப்படையில் இந்த இடங்கள் லேஅவுட் அமைத்து வழங்க உள்ளோம். இந்த இடத்திற்கு ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா காலனிகள் என்று பெயரிடப்பட உள்ளது" என்றார்.