தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை
அகர்தலா: திரிபுரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 11 சுகாதார ஊழியர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் திரிபுரா மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே இடத்தில் பணிபுரியும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவை 72 மணி நேரத்திற்கு மூட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவலைச் சேகரிக்க தொடங்கியுள்ளதாகவும் அம்மாநிலத்தின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் திடீரென அதிகரித்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
கொரோனா தடுப்பூசி பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வந்த மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. ஏற்கனவே, மாநிலத்திலுள்ள 84% சுகாதார ஊழியர்களுக்கும் 70% முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த ஜனவரி மாதம் திரிபுராவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் கூட ஒற்றை இலக்கிலேயே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்து. இந்தச் சூழ்நிலையில், ஒரே மருத்துவமனையில் பணிபுரும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.