திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்- திடுக் தகவல்!!
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயமாகி இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த வினோத்ராய் குழுவின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கேரளாவில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை மன்னர் குடும்பத்தினர் அபகரிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோரை நியமித்து கோவிலின் கணக்குகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் வினோத்ராய் தலைமையிலான குழு கோவிலின் ரகசிய அறைகள், நகைகள், வரவு-செலவு விவரங்களை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் இருந்த நகைகள் சுமார் 82 முறைகள் எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 893.44 கிலோ தங்க ஆபரணங்கள், பொருட்கள் பொக்கிஷ அறையில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 627 கிலோ தங்க ஆபரணங்களே மீண்டும் பொக்கிஷ அறைகளில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 266 கிலோ தங்க நகைகள் மாயமாகி உள்ளன.
இதுபோல பக்தர்களால் கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட நகைகள் என்ன ஆனது? என்ற விவரமும் தெளிவாக இல்லை. உண்டியல் பணம் மற்றும் வரவு-செலவு விவரங்களிலும் பல குளறுபடிகள் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மூலம் கோவிலை பராமரித்து வரும் மன்னர் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி மன்னர் குடும்பத்தினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.