பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் சஸ்பெண்ட் - நிதி அமைச்சகம் அதிரடி
பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: முறைகேடான பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேரை மத்திய நிதி அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
இதனிடையே கருப்பு பணத்தை சட்ட விரோதமாக வங்கியில் செலுத்தி மாற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உதவுவது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும், பணப் பரிவரித்தனைகள் தொடர்பாக பல்வேறு நெறிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்தது. அதில், பணப் பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் வங்கி அலுவலர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனை ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு எந்த வகையிலும் உதவக் கூடாது. அவ்வாறு உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது.
இந்நிலையில், பணப் பரிவர்த்தனையின் போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாகப் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 வங்கி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.