டெல்லியில் 5 ஆண்டில் 227% அதிகரித்த பாலியல் பலாத்காரங்கள்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
தலைநகர் டெல்லியில், கடந்த 5 ஆண்டில் 227% பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக டெல்லி போலீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பெண்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவு
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளதாக டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவி, கொடூர கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி எறியப்பட்டு பலியானார்.
இந்த அதிர்ச்சி தரும் கொடூர சம்பவத்துக்குப் பின் நாட்டில் பலாத்கார குற்ற வழக்குகளின் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. அதிலும் குறிப்பாக டெல்லியில் கடந்த 2011ம் ஆண்டு 572 பலாத்கார புகார் பதியப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக, 2,155 குற்றச் செயல்களாக அதிகரித்துள்ளது கவலை தரக்கூடியதாக உள்ளது.
நிர்பயா தாக்குதல் நடந்த 2012ம் ஆண்டு பலாத்கார குற்றச் சம்பவங்கள் 132 சதவீதம் அதிகரித்திருந்தது. அதன்பின் ஆண்டுதோறும் அதன் எண்ணிக்கை 32 சதவீதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
2013ம் ஆண்டு பாலியல் குற்ற வழக்கின் எண்ணிக்கை 1,636 ஆக இருந்தது. பின் அது உயர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு 2,155ஐ தொட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் 836 புகார்கள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
48 மணி நேரத்தில் 5 பாலியல் குற்றங்கள்
பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த ஆண்டு மட்டும் 4,165 வழக்குகள் பதிவாகின. இது 2012ம் ஆண்டில் இருந்த 727 எண்ணிக்கையை காட்டிலும் 473 சதவீதம் கூடுதலாகும். அதே போல, கடந்த ஜூன் மாதத்தில் 48 மணி நேரத்துக்குள் 5 பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துகின்றன.
Recommended Video
உச்சநீதிமன்றம் கடுமை
மத்திய அரசின் அறிவுரை மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறும் காவலர்களுக்கு கடும் தண்டனை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு போலீசார் மத்தியில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதிக புகார்கள் வந்தாலும் அவற்றின்மீது போலீசார் நடவடிக்கை எடுத்து விடுகிறார்கள்.
குழந்தைகள் பாதுகாப்புக்குத் தனிச்சட்டம்
டெல்லி சமூக ஆர்வலர், ஆனந்த் குமார் அஸ்தானா செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், 'பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், பலாத்கார குற்றப் புகார்கள் அதிகளவில் , போலீசாரால் பதிவு செய்யப்படுகிறது. இது முன்பு இல்லாத நடவடிக்கை.
போலீசார் மீது நடவடிக்கை
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, குற்றவியல் சட்டத் திருத்தத்தில் புதிதாக விதி சேர்க்கப்பட்டது. அதில், பெண் போலீஸ் அதிகாரிகள் முன்பதிவு செய்யப்படும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத காவலர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடக்காத நிலை வேண்டும்
தலைநகர் டெல்லியில் உள்ள நிலையே இப்படி என்றால் நாட்டின் குக்கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலியல் குற்றங்களே நடக்காத நிலை வரவேண்டும் . அதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய உருப்படியான கலாசார நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.