நாளை விண்ணில் சீறிப் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்.. 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்
ஸ்ரீஹகோட்டா : முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 செயற்கைக்கோள் நாளை மாலை 4.52 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 11.52 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், தற்போது ஜிசாட்-6 என்ற தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி வரிசையில் இது 9-வது ராக்கெட். அதேபோல ஜிசாட் வரிசையில் இது 25-வது செயற்கைக்கோள் ஆகும்.
ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் க்ரையோஜெனிக் இன்ஜின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது.
தற்போது, தகவல் தொழில் நுட்ப பயன்பாட்டுக்காக செலுத்தப்பட உள்ள ஜிசாட்-6 செயற்கைக் கோள் ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த எடை 2,500 கிலோவாகும். இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப்பெரிய 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.