அஸ்ஸாம் வன்முறையில் 29 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு
டிஸ்பூர்: வன்முறையை தொடர்ந்து அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார், பக்ஷா, சிராங், உதால்குரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பூர்வீக பழங்குடியினத்தவரான போடோ இன மக்களுக்கும், வங்கதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்து இந்த மோதல் உருவானது. இதையடுத்து போடோ தீவிரவாதிகள் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கோக்ரஜார் மற்றும் பக்ஷா மாவட்டங்களில் 29 பேர் பலியாகினர்.
இதையடுத்து கோக்ரஜார், சிராங் மற்றும் பக்ஷா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்ஷாவில் பார்த்தவுடன் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் போடோ இன மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். அதே போல் போடோ இன மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லீம்களும ஊரைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கோக்ரஜார் மற்றும் பக்ஷா மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் புதிதாக வன்முறை சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.