நாடே எதிர்பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி 3-ஆவது முறையாக ஒத்திவைப்பு!
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதியை இன்று மூன்றாவது முறையாக நீதிபதி ஓ.பி.ஷைனி ஒத்தி வைத்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 25-ந் தேதி முடிவடைந்தது. அன்றைய தினம் தீர்ப்பு தேதியை அறிவிக்காமல் நீதிபதி ஓ.பி.ஷைனி ஒத்தி வைத்தார்.
பின்னர் ஆகஸ்ட் 25-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார் நீதிபதி ஓபி ஷைனி. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து செப்டம்பர் 20-ஆம் தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி கூறியிருந்தார். அன்றைய தினமும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் அக்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு தேதிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை சேர்க்க தாமதம் ஆகிவிட்டதால் வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பை வரும் நவம்பர் 7-ல் வெளியிடுவதாக நீதிபதி ஷைனி தெரிவித்திருக்கிறார்.
நாடே பெரிதும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.