ஸ்பெக்ட்ரம் வழக்கு: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மனு
டெல்லி: ஸ்பெட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான சி.ஏ.ஜி., தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டது. மேலும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கைமாறியது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வந்துள்ளனர்.
இந்நிலையில் கனிமொழி சார்பில் அவரின் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், எனக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை விரைந்து மேற்கொண்டு தீர்ப்பு அளிக்க வேண்டும் என கனிமொழி தரப்பில் கூறப்பட்டுள்ளது.