2ஜி வழக்கு: சிபிஐ கூடுதல் சாட்சிகளை சேர்க்க கனிமொழி எதிர்ப்பு
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு, டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சார்பில், சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. உண்மையை வெளிக்கொணர இவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் தனது மனுவில் சிபிஐ தெரிவித்திருந்தது.
பதில் அளிக்க நோட்டீஸ்
வழக்கில் கூடுதல் சாட்சிகளை சேர்க்க அனுமதி கோரி, சி.பி.ஐ., தாக்கல் செய்த மனு, முன்னர் விசாரணைக்கு வந்த போது, அதற்கு பதில் அளிக்கும்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும், நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
கனிமொழி எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்யும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது.
கூடுதல் சாட்சியம் ஏன்?
இந்நிலையில், மிகவும் தாமதமாக கூடுதல் சாட்சியங்களை சேர்க்க, அனுமதி வேண்டி, சி.பி.ஐ., மனு செய்துள்ளது சரியல்ல. எனவே, சி.பி.ஐ.,யின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல; அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, கனிமொழி தெரிவித்துள்ளார்.
சரத்குமார் மனு
அதேபோல், கலைஞர் 'டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும், 'சி.பி.ஐ., மிகவும் தாமதமாக, கூடுதல் சாட்சிகளை சேர்க்க அனுமதி கோரியுள்ளதால், அதை ஏற்கக் கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
14ஆம் தேதிக்குள் பதில்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலரோ, 'சி.பி.ஐ.,யின் மனு தொடர்பாக, பதில் தாக்கல் செய்யப் போவதில்லை. அதற்கு பதிலாக, தங்களின் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைப்பர்' என, கூறினர்.
அக்டோபர் 27ல் விசாரணை
இதனையடுத்து, இது தொடர்பாக வரும் 14ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிபிஐ மனு மீது முடிவு
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதத்தை கேட்ட பின்னரே, சி.பி.ஐ., மனு மீது முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.