2ஜி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை: கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் சாகித் பல்வா உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் சாகித் பல்வா உள்ளிட்ட பலர் மீதான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணையின்போது, தங்கள் தரப்பில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என சிபிஐ-யின் புதிய வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் சாகித் பல்வா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.