2ஜி குறித்த அனைத்து முடிவுகளும் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தேன்: ஆ. ராசா
டெல்லி: 2ஜி விவகாரத்தில் தான் எடுத்த அனைத்து முடிவுகளும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழல் வழக்கின் இறுதி வாதம் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு திங்கட்கிழமை துவங்கியது. அப்போது முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் மனு சர்மா ஆஜராகி வாதாடினார்.
அவர் கூறுகையில்,
ராசா எடுத்த அனைத்து முடிவுகளும் அவரின் துறையினர் பரிந்துரை செய்தது தான். அவராக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அனைத்து முக்கிய நேரங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ராசா பிரதமர் மற்றும் சக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். முடிவுகள் குறித்து அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதியிடமும் சம்மதம் பெறப்பட்டது.
2ஜி விவகாரத்தில் எந்த சதியும் நடக்கவில்லை. 2ஜி விவகாரத்தில் ராசா ஒரு பைசா கூட பெறவில்லை. அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் புதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999 என்ற கண்ணாடி மூலம் பார்க்க முடியும். அந்த கொள்கையின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதையும் சரிபார்க்க முடியும்.
2ஜி விவகாரத்தில் ராசா நாடாளுமன்றத்தில் கூறிய அனைத்திற்கும் பிரதமர் மற்றும் அவருக்கு பின் தொலைத்தொடர்புத் துறை அமமைச்சர்களாக வந்தவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். தொலைத்தொடர்புத் துறையும் அவரின் முடிவுகளில் நம்பிக்கை வைத்திருந்தது என்றார்.
இறுதி வாதம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.