மக்கள் நலன் கருதியே முடிவெடுத்தேன்; பிரதமருக்கு எல்லாம் தெரியும்: ஆ.ராசா
டெல்லி: 2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும் என்று 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணியை மே 5-ம் தேதி (இன்று) மேற்கொள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் எற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று வாக்குமூலங்கள் பதிவு செய்வதை நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்யப்படும் முன் நீதிபதி ஓ.பி.சைனி: "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இது நீதிபதிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயான நேரடி உரையாடல். கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பம்" என்றார்.
1718 கேள்விகளுக்கு பதில்
முதலாவதாக ஆ.ராசாவிடம், டெல்லி சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்தது. 1,700 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கிய அவர், 2 ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன்
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை உருவானதாகவும் தமது வாக்குமூலத்தில் ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
மேலும் உச்சநீதிமன்றத்தில் தமது கருத்துக்களை விரிவாக முன்வைக்க தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் ஆ. ராசா தெரிவித்தார்.
அப்போது நீதிபதி சைனி, வழக்குக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை விவாதிக்க வேண்டாம் என்றும் சிபிஜ சிறப்பு நீதிமன்றத்தில் அவரது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள்
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி.கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் இன்று நேரில் ஆஜராகி, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலங்களை அளித்தனர்.
153 சாட்சியங்கள்
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், சிபிஐ தரப்பு சாட்சிகளான தயாளு அம்மாள் உட்பட மொத்தம் 153 பேரின் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில் தற்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்த வழக்கில் முன்னதாக 1,718 கேள்விகள் அடங்கிய 824 பக்கங்களை கொண்ட வரைவு கேள்வித்தாள் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டது.
கூடுதல் அவகாசம்
கடைசியாக இந்த வழக்கு ஏப்ரல் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 824 பக்கங்களில் 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
புல்லட் வேகத்தில் பதில் தேவை
அதற்கு டெல்லி சிறப்பு நிதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி : "குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்னை நேரடியாக எதிர் கொள்ளும் நேரம் வந்து விட்டது. இப்போதைக்கு கால அவகாசம் அளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை; ஆனால் வாக்குமூலங்களை பதிவு செய்ய தொடங்கிவிட்டால் அதை நிறுத்தக்கூடாது. புல்லட் வேகத்தில் எனக்கு பதில்களை அளிக்க வேண்டும். வாக்குமூலம் பதிவு ஆரம்பித்த பிறகு அது எந்தவித இடைவெளியும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பேன்" என கூறியிருந்தார்.
தாமதப்படுத்தக்கூடாது
மேலும், விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்படக் கூடாது எனவும் நீதிபதி கண்டித்திருந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை முதல் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பனி தொடங்கியுள்ளது.