2ஜி: ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை- சு.சுவாமி பாய்ச்சல்
ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்திய சிபிஐ அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கொந்தளித்திருக்கிறார்.
Recommended Video
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை என கொந்தளித்திருக்கிறார் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ. ராசாவும் கனிமொழியும் சிறைக்கு போவார்கள் என தொடர்ந்து பல்லவி பாடிவந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. இன்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விடுதலை செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
அப்பீலுக்கு போவேன்
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு மிகவும் மோசமான ஒரு தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் நான் முறையீடு செய்ய உள்ளேன். 2ஜி ஊழல் வழக்கில் முதன் முதலில் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்த மனுதாரர் நானே. அப்போது சிபிஐ மூலமாக காங்கிரஸ் அரசு முதலில் தனியாக அறிக்கை தாக்கல் செய்தது.
பா.சி.க்கு பாதுகாப்பு
ஆனால் பின்னர் நேர்மையான அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை பல அதிகாரிகள் காப்பாற்றினர். 2ஜி ஒதுக்கீட்டில் குற்றம் நடந்துள்ளது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அப்படியான நிலையில் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்கு நாங்கள் போனால் என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பின்னடைவு எதுவும் இல்லை
இந்த வழக்கு விசாரணையை சில அதிகாரிகள் நேர்மையாக நடத்தவிலை. டெல்லி சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பால் இந்த வழக்குக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை. இந்த வழக்கில் இருந்து பிரதமர் நரேந்திரடி நிச்சயம் பாடம் கற்க வேண்டும்.
முகுல் ரோத்தகி விவகாரம்
போர்க்கால அடிப்படையில் ஊழலை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். அவர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டதை நான் எதிர்த்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்காக வாதாடியவர்தான் முகுல் ரோத்தகி. இந்த வழக்கின் தொடக்கத்தில் சிபிஐ தரப்பில் உற்சாகம் காணப்பட்டது. ஆனால் போகப் போக நிலைமை மோசமாக இருந்தது என நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை இதுபோல் அரசு நடத்திய விதம் கடும் கண்டனத்துக்குரியது. இவ்வழக்கு முறையாக கையாளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்