2ஜி வழக்கில் கூடுதல் சாட்சியம்: ராசா, கனிமொழி எதிர்ப்பினால் சிபிஐ மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், புதிதாக 5 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட மனு மீதான உத்தரவை சி.பி.ஐ. நீதிமன்றம் 18-ம் தேதி ஒத்திவைத்துள்ளது
கடந்த, 2008ல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக, 2009ல் ஒரு தொண்டு நிறுவனம் புகார் அளித்தது. அதன்படி துவங்கிய விசாரணை; மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, 'இந்த முறைகேடுகளால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது' என்று அறிக்கை வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வந்த வழக்கு விசாரணை, 2011ல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு, நீதிபதி ஓ.பி.ஷைனி, நவம்பர், 2011ல், 17 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கத் துவங்கினார். இதுவரை நடந்துள்ள விசாரணையில், 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 35 ஆயிரம் பக்கங்களுக்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளன.
கூடுதல் சாட்சியங்கள்
இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், உதவி இயக்குனர் சத்யேந்திர சிங், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் நவில் கபூர், மற்றும் வங்கி அதிகாரி டி.மணி உட்பட மேலும் சிலரின் வாக்குமூலங்களைப் பெற சம்மன் அளிக்க நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்திருந்தது.
கனிமொழி, ராசா எதிர்ப்பு
சிபிஐ-யின் இந்த மனுவை ஆ.ராசா, மற்றும் கனிமொழி ஆகியோர் எதிர்த்தனர். ஆ.ராசா மற்றும் கனிமொழி சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், விசாரணை முடியும் கட்டத்தை நெருங்குகையில் சிபிஐ இந்த மனுவைச் செய்திருப்பது பற்றி தங்கள் தரப்பு ஐயங்களை எழுப்பினர்.
சி.பி.ஐ. சூழ்ச்சியா?
ஏற்கெனவே சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் மீண்டும் இந்தக் கோரிக்கையை வைத்திருப்பது சிபிஐ-யின் சூழ்ச்சியைக் காண்பிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சில தொழிலதிபர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நம்பகமான சாட்சியா?
ஆ.ராசா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் வாக்குமூலங்களை சிபிஐ பதிவு செய்ய கோரியுள்ளது. ஆனால் சாட்சியாக அவற்றை எடுத்துக் கொள்ள முடியாது என்றும், சிபிஐ-க்கு நீதிமன்றம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கினாலும், நீதிமன்றம் அவற்றை நம்பகமான சாட்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.
தாமதம் ஏன்?
அதே போல் கனிமொழி வழக்கறிஞரும், இந்த கோரிக்கை மனுவை மிகவும் தாமதமான நிலையில் சிபிஐ செய்துள்ளது என்றும், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு முடிந்த நிலையில் மீண்டும் சம்மன் அனுப்ப கோரிக்கை வைப்பது கூடாது ஆகவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
சம்மன் அனுப்ப முடியும்
சிபிஐ மனுவை குற்றம்சாட்டப்பட்ட பலரும் எதிர்க்க, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், சாட்சியங்கள் விசாரணை முடிந்த பிற்பாடும், மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்றார். மேலும், இந்த வழக்கிற்கு அதில் நிறைய தொடர்பு உள்ளது. சம்மன் அனுப்பக் கோரிய 5 பேரிடமும் ஒரு வாரத்தில் விசாரணை செய்து முடிக்கப்படும் என்றார்.
நவம்பர் 18ல் விசாரணை
சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி, எதிர்தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு சிபிஐ மனு மீதான உத்தரவை நவம்பர் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இறுதிவாதம்
2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு ஊழல் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மற்றும் 3 நிறுவனங்களுக்கு எதிரான இந்த வழக்கில், டிசம்பர் 19ம் தேதி இறுதி வாதம் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.