'படிப்பதற்காக' நீண்ட விடுப்பில் சென்ற ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அதிகாரி!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரியான மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஊழல் பின்னணி விவகாரத்தை சிபிஐ தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக பல்வேறு நிறுவனங்கள் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சியில் ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்தப் பணத்தை "லஞ்சம்' என குற்றப்பத்திரிகையில் சிபிஐ கூறியுள்ளது. சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாஹித் உஸ்மான் பால்வா, அவரது சகோதரர் ஆசிஃப் பால்வா, கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ராஜ்யசபா திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத் குமார் உள்பட 10 பேர் மீதும், சில நிறுவனங்கள் மீதும் மத்திய அமலாக்கத்துறை கடந்த ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், ரூ. 200 கோடிக்கு மேலாக நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஷேஸ்வர் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ்வர், உத்தர பிரதேச மாநில காவல் பிரிவைச் சேர்ந்தவர். மத்திய அரசுப் பணியில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியதையடுத்து, அவரை மாநில அரசுப் பணிக்கு திரும்பிச் செல்லும் உத்தரவை மத்திய அரசு கடந்த ஆண்டு பிறப்பித்தது.
ஆனால், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நிலையில் தம்மை மாநில பணிக்கு அனுப்புவது தொடர்பாக ராஜேஷ்வர் சிங் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பரிந்துரைப்படி ராஜேஷ்வர் சிங் மத்திய அமலாக்கத் துறை பணியில் முழுமையாக நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது.
ஆனால், அந்த உத்தரவை மத்திய நிதித் துறை செயல்படுத்தாமல் தாமதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் கடந்த பிப்ரவரியில் முறையிட்டார். அப்போது, மத்திய அமலாக்கத் துறை பணியில் ராஜேஷ்வர் சிங் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ரலில் மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
நீண்ட விடுப்பில் செல்வதால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு விசாரணையில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், 7 ஆண்டுகளாக மத்திய அரசுப் பணியில் இருக்கும் எனக்கு உயர் கல்வி பயில விடுப்பு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி சட்டப் படிப்பு பயில திட்டமிட்டுள்ளேன். அதனால், ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
நீதிமன்றம் எப்போதெல்லாம் நான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினாலும் அப்போது ஆஜராவேன்' என்றார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சாட்சியாக சேர்க்கப்பட்டவர்கள் சார்பில் ராஜேஷ்வர் சிங்குக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி நடைபெற்றதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் ராஜேஷ்வர் சிங்கை தனது தரப்பு சாட்சியாக சிபிஐ சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.