ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை சிபிஐ கோர்ட் நடத்த மாறன் சகோதரர்கள் எதிர்ப்பு: செப். 6-ல் இறுதி முடிவு!
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி, கலாநிதி மாறன் ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது செப்டம்பர் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீதான ஏர்செல்- மேக்சிஸ் பங்குகளை முறைகேடாக விற்பனை செய்து; அதன் மூலம் சன் டிவி ரூ743 கோடி ஆதாயம் அடைந்தது தொடர்பான வழக்கும் நீதிபதி ஓபி ஷைனியின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மீதான விசாரணையின் போது தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போதும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு முன் ஜாமீன் வழங்க மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தது.
Aircel-Maxis deal: Special 2G court reserves order on whether court has jurisdiction to try the deal, likely to pass order on Sep 6
— ANI (@ANI_news) August 27, 2016
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ நீதிமன்றம் வரம்புக்குள் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை வராது என்று தயாநிதி உள்ளிட்டோர் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தமது கருத்துகளை முன்வைத்த தயாநிதி தரப்பு வழக்கறிஞர் ரெபேகா, ஏர்செல் மேக்சிஸ் பிரச்சனை என்பது தனிநபர் சார்ந்தது; இரு வர்த்தக நிறுவனங்களிடையேயான பிரச்சனை. சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவைப் பொறுத்தவரையில் தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்; இந்த கம்பெனிகள் விவகாரமும் தொலைத் தொடர்பு துறை சார்ந்தது என கருதுகிறது. இதற்காக எமது தரப்பு தவறு செய்தது என்றாகிவிடாது என்று வாதிட்டார்.
சிபிஐ தரப்பில், உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் சிபிஐ விசாரணை நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என கூறியிருந்தது என சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கை எந்த நீதிமன்றம் நடத்துவது என்பது குறித்து செப்டம்பர் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் எனக் கூறி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.