2ஜி ஊழல் வழக்கு: கோர்ட்டில் ராசா, கனிமொழி ஆஜர்- விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தபோது அதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அறிந்து நாடே அதிர்ச்சி அடைந்தது.
இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த ராசா, கனிமொழி ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஓ.பி. சைனி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராசா, கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகினார்.
தங்கள் தரப்புக்கு சற்று அவகாசம் வேண்டும் என குரோவர் நீதிபதியை கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.