2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கிடையாது, அது ஒரு கொள்ளை- சொல்வது காங்கிரஸ் எம்.பி
பெங்களூர்: 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு ஊழல் கிடையாது, அது ஒரு கொள்ளை என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
எப்படி இருந்தாலும், ஜெயலலிதா வுக்கு எனது தார்மீக ஆதரவு உண்டு. அவசியம் ஏற்பட்டால் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன். இன்றும் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். நான் இருக்கும் இடம்தான் காங்கிரஸ். நான் கட்சி மாறுவதற்காக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
மேலும், ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை சுருட்டிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல; அது கொள்ளை. அதுபோன்று உலகில் வேறெங்கும் நடந்திருக்க முடியாது.
பாஜக அரசு, சிபிஐ மற்றும் அனைத்து துறைகளும் சரியாக நடவடிக்கை எடுத்தால் பல பேர் சிறைக்கு போவார்கள். 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஏமாற்றியுள்ளனர். மன்மோகன்சிங் வெறும் கருவிதான். இந்த ஊழலில் புதுவையை சேர்ந்த ஒருவரும் இருந்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பெயர்களை காலம் வரும்போது சொல்வேன். நான் எப்போதும் ஊழல்வாதிகளை ஆதரிக்க மாட்டேன். விரைவில் நான் மோடியை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கண்ணன் தெரிவித்தார்.