திருப்பதி: கள்ளத்தனமாக லட்டு விற்ற 3 பேர் கைது! – உண்டியல் திருடனும் பிடிபட்டான்
திருமலை: திருமலையில் கள்ளத்தனமாக லட்டு தயாரித்து பக்தர்களுக்கு விற்ற 3 பேரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 38,292 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
தர்மதரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆனது. கால்நடையாக வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு 9 மணி நேரம் காத்து நின்றனர்.
தங்கும் விடுதி முன்பு பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்தனர். கம்ப்யூட்டர் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டதால் அறை ஒதுக்குவதில் தடை ஏற்பட்டது. இதனால் அறைக்காக காத்து நின்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
லட்டு பிரசாதம்
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாகத் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்ட்டர் உள்ளது. இதில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் திருப்பதியைச் சேர்ந்த நாதமுனி, வெங்கடேசன், மற்றொரு ஊழியர் கட்டைய்யா ஆகியோர் லட்டுகளை முறைகேடு செய்ததை ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
திருட்டு லட்டு விற்பனை
இந்த 3 பேரும் பக்தர்களுக்கு அளிக்கும் லட்டுக்களை உதிர்த்து அதை சிறிய லட்டுகளாகப் பிடித்தும், கவுன்ட்டரில் விநியோகிக்கப்படும்போது மீதமாகும் பூந்திகளை மீண்டும் லட்டுக்களாக மாற்றியும் கள்ளச் சந்தையில் அமோகமாக விற்று வந்துள்ளனர்.
மூன்று பேர் கைது
இதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் லட்டு விநியோக கவுன்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாதமுனி பணிபுரியும் கவுன்டரில், 80 லட்டு டோக்கன்கள், சீல் இன்றி இருந்துள்ளன.
அதைப் பறிமுதல் செய்து விசாரித்ததில் நாதமுனி உள்ளிட்ட 2 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து மேல் விசாரணைக்காக திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உண்டியல் திருடன் கைது
இந்த பரபரப்புக்கு மத்தியில் கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை திருடிய திருமலை கிரிபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் (20) என்பவன் பிடிபட்டான். கோவிலில் உள்ள எவர் சில்வர் உண்டியல் நிரம்பி வழிந்தது. ஏகாம்பரம் அந்த உண்டியலில் கையை விட்டு முடிந்த அளவுக்கு பணத்தை திருடினான். மேலும் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தான். இதனை கண்டுபிடித்த ஊழியர்கள் அவரை பிடித்தனர். அவனிடம் இருந்து ரூ.4320 கைப்பற்றப்பட்டது. திருமலை போலீசார் அவனை கைது செய்தனர்.