ரூ. 3 கோடியுடன் எஸ் ஆன வங்கி மேலாளர்.. சாக்குப் பை நிறைய பணத்துடன் திரும்பி வந்தார்!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ. 3 கோடி பணத்துடன் தலைமறைவான வங்கி மேலாளர் ஒருவர், 12 நாட்கள் பரபரப்புக்குப் பின்னர் அந்தப் பணத்தை சாக்குப் பையில் போட்டுக் கட்டி எடுத்து வந்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தார்.
நான்கு சாக்குப் பை நிறைய அந்தப் பணத்தை அவர் கொண்டு வந்திருந்தார். இதையடுத்து வங்கி ஊழியர்களை வரவழைத்த போலீஸார் பணத்தை எண்ண உத்தரவிட்டனர். ஆறு மணி நேரம் செலவிட்டு ஊழியர்கள் பணத்தை எண்ணி முடித்தனர்.
அந்த மேலாளரின் பெயர் சுதர்ஷன் ஜோஷி. இவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவரது கிளையிலிருந்து ஜனவரி மாதத் தொடக்கத்தில் ரூ. 3 கோடி காணாமல் போனது. அதன் பின்னர் ஜோஷியும் தலைமறைவாகி விட்டார். தற்போது அவர் ஹத்ரா மாவட்ட போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.
அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ 30,000 குறைவாக இருந்தது தெரிய வந்தது.