கர்நாடகாவில் மேலும் 3 விவசாயிகள் தற்கொலை.. கடன் தொல்லையால் தொடரும் சோகம்
தும்கூர் : கடன் பிரச்னை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் மேலும் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநில அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள காரேகுத்திஹள்ளிச் சேர்ந்த விவசாயி ரேணுகாராத்தியா தனது நிலத்தில் நடவு செய்திருந்த தென்னை, வாழை, பாக்கு கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, பல்வேறு இடங்களில் கடன் வாங்கி, ஆழ்துளைக் கிணறு தோண்டினார்.
ஆனால், போதிய விளைச்சல் இல்லாததால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்த ரேணுகாராத்தியா நேற்று தனது வீட்டினருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, சிவமொக்கா மாவட்டம், முத்தேனகுப்பா கிராமத்தைச் சேர்ந்த சேகரப்பா உழவுப் பணிக்காக, வங்கியில் ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
உரிய காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், கடந்த 23-ஆம் தேதி அவர் விஷம் அருந்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேகரப்பா, நேற்று காலை உயிரிழந்தார்.
தாவணகெரே மாவட்டம், அரகினகெரே கிராமத்தைச் சேர்ந்த ருத்தரப்பா, 4 ஏக்கரில் மக்காச்சோளம், மிளகாய் பயிரிட்டிருந்தார். விளைச்சல் பொய்த்ததால், கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தொடரும் விவசாயிகள் தற்கொலைச் சம்பவத்தால் எதிர்ட்சிகள் கொந்தளித்துள்ள நிலையில், கர்நாடக அரசு நெருக்கடி முற்றியுள்ளது.