ஜம்முவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் அருகே உள்ள பதல் கிராமத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ முகாம் அமைந்துள்ளது. அந்த முகாம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர். தீவிரவாதிகள் நேற்று இரவே பதல் கிராமத்திற்குள் நுழைந்து பதுங்கியிருந்து இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 வீரர்கள் பலியான முகாம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைத்து ராணுவ முகாம்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.