ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சி: ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நாக்பூரில் கைது!!
நாக்பூர்: உலகின் மிக கொடூரமான ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மகாராஷ்டிராவின் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சிக்கும் இந்திய இளைஞர்களின் கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் புனேவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியிருந்தார். ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற 11 சிறுவர்கள் சிக்கினர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து பிடிபட்டிருந்தனர். இந்நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 மாணவர்களைக் காணவில்லை என புகார் கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை தெலுங்கானா போலீசார் மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாக்பூர் அம்பேத்கர் விமான நிலையத்தில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் செல்வதற்காக காத்திருந்த போது காணாமல் போன 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்திருந்தது தெரியவந்தது.
அதாவது ஜம்மு காஷ்மீர் சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். இயக்கத்துடன் இணைய இருந்தனராம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 மாணவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.