3 அமைச்சர்களோடு லிப்ட் அறுந்து விழுந்து விபத்து - கேரள சட்டசபையில் பரபரப்பு !
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் மூன்று அமைச்சர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுடன் சென்று கொண்டிருந்த லிப்ட் ஒன்று திடீரென அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயமின்றி மீட்கப் பட்டனர்.
கேரளாவில் தற்போது சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று சபை கூடியதும், மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்தி வைக்கப் பட்டது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
அப்போது தொழில்துறை அமைச்சர் பி.கே.குஞ்ஞாலி குட்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் வி.கே.இப்ராகிம் குஞ்சு, உணவு வழங்கல் துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் மற்றும் அவர்களது உதவியாளர்கள் ஆகியோர், முதல் தளத்தில் இருந்து தரைதளத்துக்கு செல்வதற்காக லிப்ட்டில் ஏறினார்கள்.
தரை தளத்திற்கு சென்று கொண்டிருந்த லிப்டின் கயிறு திடீரென அறுந்தது. இதனால் பலத்த சத்தத்துடன் லிப்ட் செங்குத்தாக சென்று பாதாள அறையில் விழுந்தது.
லிப்ட் அறுந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற உறுப்பினர்கள், விரைந்து செயல்பட்டு லிப்டின் கதவைத் திறந்து உள்ளிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.