மன்மோகன் இலங்கை செல்ல அந்தோணி உள்பட 5 அமைச்சர்கள் எதிர்ப்பு.. பணிவாரா பிரதமர்?
டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதற்கு இதுவரை ஐந்து மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தைச் சேராத பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தைச் சேராதவரான ஏ.கே.அந்தோணியும், தற்போது பிரதமர் இலங்கைக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தோணி தவிர ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகிய இரு அமைச்சர்களும், இலங்கை பயணத்தை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜெயந்தி நடராஜனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போது நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5 மத்திய அமைச்சர்கள் இலங்கை பயணத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதால், பிரதமரின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த வாரம் காமன்வெல்த் மாநாடு
இலங்கையில் அடுத்த வாரம் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின்போது காமன்வெல்த் தலைவராக இலங்கையை 2 ஆண்டுகளுக்குத் தேர்வு செய்யவும் உள்ளனர்.
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு
ஆனால் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட அத்தனை அரசியல் தலைவர்களும், இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இசைப்பிரியா வீடியோவால் புதிய பரபரபப்பு
ஆனால் காங்கிரஸ் கட்சியும் சரி, பிரதமரும் சரி, இலங்கைக்குக பிரதமரை அனுப்புவது என்ற குறிக்கோளில் இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி, பிரதமர் இலங்கை செல்வதற்கு அனுமதியும் அளித்து விட்டது. இந்த நிலையில்தான் இசைப்பிரியா வீடியோ காட்சிகள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிங்களப் படையினரிடம் சிக்கிய இசைப்பிரியா
விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக, பாடகியாக இருந்தவர் இசைப்பிரியா. இவரை உயிருடன் பிடித்து பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாக்கி, பின்னர் கொன்றுள்ளனர் சிங்களப் படையினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பார்ப்பர் நெஞ்சங்களைப் பதற வைத்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு
இந்தப் பின்னணியில் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை செல்லக் கூடாது என்று மத்திய அமைச்சர்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.
ஜி.கே.வாசன், ப.சிதம்பரம்
கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரதமரையே நேரில் சந்தித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இதேபோல நிதியமைச்சர் ப.சிதம்பரமும் இலங்கை பயணத்திற்கு எதிரான கருத்தையேப் பதிவு செய்துள்ளார்.
ஏ.கே.அந்தோணியும் ஆட்சேபனை
இந்த நிலையில் தமிழகத்தைச் சேராதவரான, கேரளாவைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் தற்போது பிரதமர் இலங்கை போகக் கூடாது என்று கூறியுள்ளார்.
தமிழர்கள் உணர்வை மதிக்க வேண்டும்
உலகத் தமிழர்கள் அனைவரும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இசைப்பிரியா படுகொலை உள்ளிட்டவற்றால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை பிரதமர் மதிக்க வேண்டும். எனவே 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்று அந்தோணி கூறியுள்ளாராம்.
நாராயணசாமியும் எதிர்ப்பு
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மன்மோகன் சிங் உரிய முடிவு எடுப்பார் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும் அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவசங்கர் மேனனின் பிடிவாதம்
ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன்தான், பிரதமர் இலங்கைக்குப் போயாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படிப் போகாவிட்டால் இலங்கை, சீனா பக்கம் போய் விடும் என்று மத்திய அரசை அவர் பயமுறுத்தி வருகிறாராம். மேலும் ராஜபக்சே இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி விட்டார் என்றும் பச்சைப் பொய்யாக பேசி வருகிறாராம் மேனன்.
மேனன்தான் மிகத் தீவிரம்
பிரதமரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதில் மேனன்தான் மிகத் தீவிரமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால் தமிழகத்தைப் பகைத்துக் கொள்ளுமா காங்...
ஆனால் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்குப் போனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்படும். தமிழக மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படும் என்ற அச்சமும் காங்கிரஸ் கட்சியிடம் எழுந்துள்ளது. இதை மறைமுகமாக தெரிவிப்பது போலவே அந்தோணியின் கருத்தும் உள்ளதாக கருதப்படுகிறது.
எனவே பிரதமரின் இலங்கை பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.