மாம்பழ ஜூஸ் குடித்த 3 குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு... ஐசியுவில் அனுமதி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மாம்பழக் குளிர்பானம் குடித்த மூன்று சிறுவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே ராம்கோட் நகரில் நேற்று முன் தினம் அம்மூன்று குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர் செயற்கையாக அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாம்பழக் குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதனைக் குடித்த சிறிது நேரத்திலேயே அக்குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் ஜஹனுமாவில் உள்ள பாராஹ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை மேலும் கவலைக்கிடமானது. இதனால், ராம்கோடில் உள்ள ஆதித்யா மருத்துவமனைக்கு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையே நான்கு, மூன்று மற்றும் ஒரு வயது ஆகும். இவர்களில் 3 வயது சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமலான் நோன்பை முடித்து பிறகு, அருகில் இருந்த கடை ஒன்றில் இந்தக் குழந்தைகள் குளிர்பானம் வாங்கிக் குடித்ததாக அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் குளிர்பானம் வாங்கிய கடைக்காரர் மறுத்துள்ளார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் முடிவிலேயே குழந்தைகளின் திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.