திருச்சானூர் பிரம்மோற்சவம்: 3 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி அம்மன் பிரம்மோற்சவ விழாவின் இறுதிநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 8 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
9ம் நாளான நேற்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. இதில் நாட்டின் பல பகுதிகளிலும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
பத்துநாள் திருவிழா
திருச்சானூர் பத்மாவதி அம்மனுக்கு பத்துநாள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வசந்த உற்சவம்
5ம் நாளான்று வசந்த உற்சவம் கொண்டாடப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தியை திருச்சானூர் வீதிகளில் கொண்டு சென்றபோது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை தெளித்துக் கொண்டு வசந்த உற்சவத்தை கொண்டாடினர்.
பஞ்சமி தீர்த்தம்
பிரம்மோற்சவ விழாவின் இறுதிநாளானன்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. அதையொட்டி காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வாரை பல்லக்கு வாகனத்தில் வைத்து கோவிலின் நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று, முக மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பட்டார்.
திருமஞ்சனம்
அங்கு காலை 8 மணியில் இருந்த 9 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதே போல் காலை 10 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை இரண்டாவது வது முறையாக உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
புஷ்கரணியில் நீராடல்
அதன்பிறகு நண்பகல் 12.05 மணியில் இருந்து 12.12 மணிவரை கோவில் புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடந்தது. உற்சவ மூர்த்திகளான பத்மாவதி தாயாரும், சக்கரத்தாழ்வாரும் புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடப்பட்டனர்.
3 லட்சம் பக்தர்கள்
இதனைத் தொடர்ந்து புஷ்கரணியில் கூடியிருந்த சுமார் 3 லட்சம் பக்தர்கள் குளத்தில் புனித நீராடினார்கள்.மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயாரை கங்குன்ற மண்டபத்திற்கு கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்த 10 மணி வரை தங்க திருச்சி வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்துருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு கொடியிறக்கு நிகழ்ச்சி நடந்தது. இதோடு வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா முடிவடைந்தது.