தாய் பலாத்காரம்.. ஓடும் ஆட்டோவிலிருந்து வீசப்பட்ட கைக்குழந்தை.. டெல்லியில் பயங்கரம்!
டெல்லியில் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த காமுகர்கள் இடையூறாக இருந்த 9 மாத குழந்தையை வீசியெறிந்து கொன்றுள்ளனர்.
டெல்லி: குர்கான் பகுதியில் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த காமுகர்கள் இடையூறாக இருந்த குழந்தையை ஓடும் ஆட்டோவில் இருந்து வீசியெறிந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தது.
குர்கான் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 29ஆம் தேதி இரவு தனது கணவருடன் ஏற்பட்ட சண்டைக் காரணமாக 9 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி கன்டசா கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார்.
ஆட்டோவில் ஏற்கனவே மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அந்த பெண் ஆட்டோவில் ஏறி அமர்ந்ததுமே மூன்று பேரும் பாலியல் லீலைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீசப்பட்ட குழந்தை
இதனால் அந்தப்பெண் கூச்சலிடவே அவரது குழந்தையும் அழ தொடங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கொடூரர்கள் ஓடும் ஆட்டோவில் இருந்து குழந்தை பிடுங்கி வீசி எறிந்துள்ளனர்.
தாய் பலாத்காரம்
இதில் படுகாயமடைந்த அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து பழைய கன்டசா சாலையில் ஆட்டோவில் வைத்து அந்த கும்பல் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.
கொலை வழக்குப்பதிவு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில் கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பலாத்காரம் குறித்த மருத்துவ பரிசோதனைக்கு அந்தப் பெண் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஹரியானாவில் அதிர்ச்சி
இதனிடையே ஹரியான மாநிலம் யமுனா நகர் மற்றும் அம்பாலா பகுதியில் 2 பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற இந்த 2 சம்பவங்களும் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு பெண் கொலை
இதில் 23 வயதான பெண்ணின் சடலம் ரோதக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 26 வயதான மற்றொரு பெண் சுயநினைவிழந்து அவரது வீட்டின் அருகில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களும் கொலைகளும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.