காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண்
காஷ்மீர்: ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம்( Kanigam) என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பதை கண்டறிந்த போலீஸார், அவர்களிடம் முடிந்தளவு பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்க, இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும், தவுசிஃப் அகமது என்ற நபர் சரணடைந்தார். அவர் பயங்கரவாத குழுவில் புதிதாக இணைந்த நபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.