மபியில் வெடித்த மோதல்.. முஸ்லிம்களின் 3 வீடுகள் “புல்டோசரில்” இடிப்பு - கல்வீசியதாக போலீஸ் புகார்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த 3 முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் மூலமாக தகர்க்கப்பட்டு இருக்கின்றன.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் உள்ள சுர்ஜானி கிராமத்தில் கர்பா திருவிழா நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் இரு பிரிவினரும் கைகலப்பில் ஈடுபட்டு கொண்டதுடன் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. சல்மான் கான் என்ற நபர் கர்பா திருவிழா சமயத்தில் பைக் ஓட்டிச் செல்லும்போது மற்றொரு பிரிவினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
ராவணன் பொம்மையை எரிக்காத காங்கிரஸ்.. மத்திய பாஜக அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பு.. ஏன் தெரியுமா?
பைக் பிரச்சனை
இது குறித்து சல்மான் கானின் தந்தையிடம், தகராறில் ஈடுபட்ட ஷிவ்லால் படிதார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் இரு தரப்பினர் இடையிலான வன்முறையாக உருவெடுத்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காயங்கள்
அப்போது ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் பெண் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த மோதலில் ஷிவ்லால் படிதார் மற்றும் அவரது நண்பர் மகேஷ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதில் ஷிவ்லாலின் நண்பர் மகேஷ் கோடாரியுடன் நிற்கும் புகைப்படம் ஊடகங்களிலும் வெளியானது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராக் சுஜானா வன்முறை தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பைக் தகராறு வன்முறையாக உருவெடுத்தது தெரியவந்துள்ளது.
7 பேர் கைது
இந்த வன்முறையில் ஈடுபட்டதாக 19 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 19 பேரில் 7 பேரை கைது செய்து இருப்பதாக எஸ்.பி. சுஜானா தெரிவித்து இருக்கிறார். கைதானவர்களில் சிலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வீடுகள் இடிப்பு
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 3 இஸ்லாமியர்களின் வீடுகள் இன்று புல்டோசர் மூலமாக இடித்து தகர்க்கப்பட்டன. இதுகுறித்து எஸ்.பி. கூறுகையில், "தகர்க்கப்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டவை. 4,500 சதுர அடி கொண்ட ரூ.4.5 கோடி மதிப்பிலாக சட்டவிரோத கட்டிடத்தை வருவாய்துறை உதவியோடு இடித்துள்ளோம்" என்றார்.
ராம நவமி கலவரம்
இதற்கு முன்பாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதும் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி இஸ்லாமியர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டது. அப்போது கை இல்லாத இஸ்லாமியர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி அவரது கடை தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.