திருப்பதி சென்றபோது விபரீதம்... விபத்தில் சிக்கி ஓசூரைச் சேர்ந்த 3 பேர் பலி; 4 பேர் படுகாயம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காரில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓசூரை சேர்ந்த 3 பக்தர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சூரி என்கிற சுரேஷ். இவரது நண்பர் நரேன். இருவரும், உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் புறப்பட்டனர். அவர்களது கார் திருப்பதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை மெல்லி என்பவர் ஓட்டினார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, திடீரென இவர்கள் சென்ற கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் டிரைவர் மெல்லி மற்றும் சூரி, நரேன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். காரில் அவர்களுடன் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயத்துடன் துடிதுடித்த அவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பலமநேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேபோல் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பலமநேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.