ஜம்முவில் பேய் மழை, திடீர் வெள்ளம்: பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 குழந்தைகள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீர் என்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் வியாழக்கிழமை திடீர் என்று பேய் மழை பெய்தது. இதையடுத்து அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படோட்
பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார்(14), பாயல்(13), சிவாலோ தேவி(5) ஆகிய 3 குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு நடந்து வரும் வழியில் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் 3 பேரையும் தேடினர். இந்நிலையில் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3வது குழந்தையின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
திடீர் வெள்ளத்தால் படோட்டில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பனிச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் பனியை அகற்றும் வேலைகள் நடந்து வருவதாக ராம்பன் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் அஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.