காஷ்மீரில் பனிச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் இன்று தனி விமானத்தில் தமிழகம் வருகை
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 தமிழகர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று மாலை தனி விமானம் மூலம் தமிழகம் வரும் என தெவிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 தமிழக வீரர்களின் உடல்கள் இன்று மாலை தமிழகம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான படைக்கு சொந்தமான தனித்தனி விமானங்களில் வீரர்களின் உடல்கள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் மாநிலம் குரேஸ் பகுதியில் கடந்தவாரம் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ முகாம் முற்றிலும் புதையுண்டது. இந்த விபத்தில் முகாமுக்குள் இருந்த வீரர்கள் உயிருடன் புதைந்தனர்.
இந்த பனிச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர். இதில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஒருவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன் என்றும் மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த சுந்தரப்பாண்டி ஆவர்.
இந்நிலையில் பனிச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 5 பேரும் நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் தமிழக வீரர் என தெரியவந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் என கூறப்படுகிறது. இதன் மூலம் உயிரிழந்த தமிழக வீரர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தமிழக வீரர்கள் 3 பேரின் உடல்கள் இன்று மாலை தமிழகம் வருகிறது.
விமானப்படைக்கு சொந்தமான தனித்தனி விமானத்தில் வீரர் உடல்கள் கொண்டுவரப்படுகின்றன. தஞ்சை விமானப்படை தளத்திற்கு வரும் இளவரசன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சுந்தரபாண்டியன், தாமோதர கண்ணன் ஆகியோரின் உடல்கள் மதுரை கொண்டு செல்லப்படவுள்ளன.