கந்து வட்டி கொடுமை... சிறுநீரகத்தை விற்க கேரளா மருத்துவமனையில் தமிழர்கள் 3 பேர் அனுமதி
சிறுநீரகத்தை விற்பனை செய்ய தமிழர்கள் 3 பேர் எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எர்ணாகுளம்: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் சிறுநீரகத்தை விற்க கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்து வட்டிக் கொடுமையால் நெல்லையில் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரை அவர் பெற்ற ரூ.5 லட்சம் கடனுக்காக கேரள மருத்துவமனையில் சிறுநீரகத்தை விற்பனை செய்ய கடன் அளித்தவர் அழைத்து சென்றிருந்தனர்.
இதுகுறித்து ரவியின் மனைவி தகவல் கொடுத்ததும் போலீஸார் விரைந்து சென்று கேரள மருத்துவமனையில் இருந்த ரவியை மீட்டனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 3 பேர் சிறுநீரகத்தை விற்க எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஈரோடு பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு சிறுநீரகம் எடுக்கப்பட்டுவிட்டது. பவானி காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணும் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்தார்.
அதேபோல் வெப்படையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரகத்தை அகற்ற பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 3 பேரும் கந்து வட்டிக் கொடுமையால் சிறுநீரகத்தை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.