பாக்சைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு- தெலுங்குதேசம் கட்சியின் 3 பிரமுகர்கள் மாவோயிஸ்டுகளால் கடத்தல்!!
விசாகப்பட்டினம்: பாக்சைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம் கட்சியின் 3 உள்ளூர் பிரமுகர்களை விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா- ஒடிஷா மாநில எல்லையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் ஜிகே வீதி தாலுகாவின் கோதகுடெம் கிராமத்தில் இருந்து தெலுங்குதேசம் கட்சியின் எம். பாலையா, கே. பாலையா மற்றும் மகேஷ் ஆகிய 3 உள்ளூர் பிரமுகர்களை மாவோயிஸ்டுகள் இன்று கடத்திச் சென்றுள்ளனர். அப்பகுதியில் பாக்சைட் தாது வெட்டி எடுப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தே இக்கடத்தல் சம்பவத்தை மாவோயிஸ்டுகள் நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
முன்னதாக நேற்று தங்களது ஆதரவாளர்கள் மூலமாக 3 தலைவர்களும் தங்களை வந்து சந்திக்க வேண்டும்; அவர்களை நாங்கள் சித்ரவதை செய்யமாட்டோம் என மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பியிருந்தனராம். இதனைத் தொடர்ந்தே 3 பேரும் மாவோயிஸ்டுகளை சந்திக்க சென்றதாகவும் அப்போதுதான் 3 பேரையும் மாவோயிஸ்டுகள் சிறைபிடித்து வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாகப்பட்டினம் எஸ்.பி பிரவீன் நமது ஒன் இந்தியாவுக்கு கூறுகையில், 3 பேரையும் மாவோயிஸ்டுகள் கடத்தி வைத்துள்ளனர். தங்களது நிபந்தனையை அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த 3 பேரையும் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்ற பின்னரே தங்களது நிபந்தனையை மாவோயிஸ்டுகள் முன்வைக்கக் கூடும் என்றார்.
கடத்தப்பட்டுள்ள 3 பேரும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அடர்ந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.