அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை.. கூவி கூவி காய் விற்கும் எம்எல்ஏவின் மனைவி.. அதுவும் 3 டைம் எம்எல்ஏ
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்காகோன் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த லோக்நாத் மஹ்தோவின் மனைவி இன்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
அரசியல்வாதிகளை சமாளித்துவிடலாம். ஆனால் ஒரு சிலரின் (எல்லாரும் அல்ல) மனைவிமார்கள் செய்யும் அலப்பறை இருக்கே. கேட்கவே வேண்டாம். கணவர் சாதாரண வார்டு கவுன்சிலர் ஆகிவிட்டாலே போதும். அப்போதிலிருந்தே பந்தா வந்துவிடும்.
அது முன்னாள், முன்னாளுக்கு முன்னாள் என ஆனாலும் சரி அந்த பந்தா இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவரின் மனைவி இன்றும் காய்கறி வியாபாரம் செய்வதை கைவிடவில்லையாம்.
3 முறை எம்எல்ஏ
பட்காகோன் தொகுதியின் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் லோக்நாத் மஹ்தோ. இவர் தற்போது நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காய்கறி
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது அவரது மனைவி மவுலினிதேவி சந்தையில் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை கூவி கூவி விற்பனை செய்தார்.
வேட்புமனு தாக்கல்
அப்போது அவரிடம் கணவருடன் வேட்புமனு தாக்கல் செய்ய போகவில்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் அங்க போய் என்ன செய்ய போகிறேன். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
காய்கறி வியாபாரம்
நான் பாட்டுக்கு என் கணவருடன் சுற்றிக் கொண்டிருந்தால் வீட்டு வேலையை யார் செய்வது?. மேலும் எனது குடும்பம் விவசாய குடும்பம் என்பதால் அந்த வேலையை விடுவது மிகவும் கடினமாகும். என் கணவர் எம்எல்ஏவாக ஆவதற்கு முன்னரிலிருந்தே நான் காய்கறிகளை வியாபாரம் செய்து வருகிறேன்.
கணவரை சார்ந்திருக்கவில்லை
நான் இதை நிறைய ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதில் என்ன தவறு உள்ளது. எனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை நான் விற்கிறேன். இதற்காக ஏன் அசிங்கப்பட வேண்டும். நான் காய்கறி விற்பதன் மூலம் ஈட்டும் வருமானத்தை வைத்து வீட்டு செலவுகளை கவனித்து கொள்கிறேன். எனது கணவரது வருமானத்தை நான் சார்ந்திருக்கவில்லை என்றார்.